
ஷா அலாம் , மார்ச் 25 – போலியான கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டத்தில் ஒரு நிறுவன மேலாளர் 2.08 மில்லியன் ரிங்கிட்டை இழந்தார்.
52 வயதான அந்த நபரிடமிருந்து செர்டாங் வணிக குற்றப் புலனாய்வுத் துறைக்கு அண்மையில் ஒரு புகார் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் உமர் கான் ( Hussein Omar Khan ) தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முகநூல் விளம்பரம் மூலம் TwyAe Block முதலீட்டுத் திட்டத்தில் தான் ஈர்க்கப்பட்டதாகக் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார் என இன்று வெளியிட்ட அறிக்கையில் உசேய்ன் கூறினார்.
Charles என்ற நபரால் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படும் வாட்ஸ்அப் குழுவில் பாதிக்கப்பட்டவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் ஒன்பது வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ஒன்பது முறை மொத்தம் 2.08 மில்லியன் ரிங்கிட்டை அவர் செலுத்தியுள்ளார்.
தனது பணத்தைத் திரும்பப் பெற மேலும் கூடுதல் பணம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அந்த நிர்வாகி போலீசில் புகார் செய்தார்.
குற்றவியல் சட்டத்தின் 420 ஆவது பிரிவின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உசேய்ன் வலியுறுத்தினார்