
கோலாலம்பூர், மே 24 – சுங்கை பூலோ பகுதியில் குரங்கொன்றுக்கு வண்ண சாயம் அடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி, வலைதளவாசிகளின் கோபத்தை தூண்டியுள்ளது.
மலேசிய தெரு விலங்குகள் சங்கத்தின் (SAFM) தலைவர் ஆர். கலைவாணன், காணொளியில் உள்ள நபரைக் கண்டித்து, அவர் மீது காவல்துறை மற்றும் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (பெர்ஹிலிடன்) தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்காணொளியை பார்த்த வலைதளவாசிகள் கொந்தளித்துள்ள நிலையில் அந்நபருக்கு எதிராக பல்வேறு கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குற்றவாளிக்கு 50,000 ரிங்கிட் வரை அபராதமும் ஒரு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.