
வாஷிங்டன், மே-4- அமெரிக்காவில் 20 ஆண்டுகளாக வேண்டுமென்றே பாம்பு விஷத்தை தனக்குள் செலுத்திக் கொண்ட ஆடவரின் இரத்தம், தற்போது மனிதகுலத்திற்கே ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.
அதுவோர் ‘இணையற்ற’ விஷமுறிவு மருந்தை உருவாக்க உதவியிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Tim Friedie எனும் அவ்வாடவரைச் சோதனைக்கு உட்படுத்தியதில், அவரின் இரத்தத்தில் காணப்பட்ட antibody எனப்படும் நோய் எதிர்ப்பு புரதங்கள், பல்வேறு ஆபத்தான பாம்பு விஷங்களிலிருந்து பாதுகாப்பது தெரிய வந்தது.
இந்த விஷமுறிவு மருந்து, மிகவும் கொடியதான கருப்பு மாம்பா, நாகம் உள்ளிட்ட 13 வகை பாம்புகளுக்கு எதிராக 100 விழுக்காடு செயல்படுகிறது.
இந்த 18 ஆண்டுகளில் நாகப்பாம்பு உள்ளிட்ட பல வகை பாம்புகளிலிருந்து தயாரித்த 700க்கும் மேற்பட்ட விஷ ஊசிகளை தானாகவே தனது உடம்பில் செலுத்தியுள்ள Friedie, பல்வேறு கொடிய பாம்புகளிடமும் 200 முறை கடிபட்டுள்ளார்.
பாம்புக்கடிக்கான தற்போதைய சிகிச்சை முறையின் படி, எந்த வகை விஷப் பாம்பு கடித்ததோ, அதற்கு ஏற்ற வகையில் தான் மருந்துகள் கொடுக்கப்படும்.
இந்நிலையில், ஒரு பொதுவான விஷ முறிவை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் முற்பட்ட போதே, அவர்களின் கண்களுக்கு Friedie தென்பட்டார்.
சோதனைக்காக, ஒரு முறை Friede உடலில் விஷத்தை செலுத்திய போது, அளவுக்கதிகமான விஷத்தால் அவர் கோமா நிலைக்குச் சென்று 4 நாட்கள் உயிருக்குப் போராடினார்.
மரணத்தின் விளிம்புக்கே சென்று வந்தாலும், தன்னால் மனிதகுலத்திற்கு ஏதாவது நல்லது செய்ய முடிகிறதென்றால் அது தமக்கு பெருமையே என்கிறார் Friedie.
ஆண்டுதோறும் பாம்புக்கடியால் 1 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்; அப்படியே உயிர் பிழைத்தாலும் 3 மடங்கு மக்கள் உடலுறுப்பை இழக்கின்றனர் அல்லது நிரந்தர குறைபாட்டிற்கு ஆளாகின்றனர் என உலக சுகாதார நிறுவனமான WHO தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.