
கோலாலம்பூர், பிப்ரவரி 21 – கோலாலம்பூரில், ஒரு பெண் புரோட்டான் சாகா காரை அரிவாள் போன்ற கூரிய ஆயுதத்தால் பலமுறை தாக்கி சேதப்படுத்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அக்காட்சியில், சம்பந்தப்பட்ட அப்பெண் காரின் ஓட்டுநர் பக்க கண்ணாடி வழியாக உள்ளே கையை நுழைத்து முதலில் ஏதோ தேடியுள்ளார். பின்னர் காரின் பின்விளக்கு மற்றும் மற்ற பாகங்களைக் கடுமையாக தாக்கியுள்ளார்.
அந்தக் காணொளியில், காரை சுற்றி பலரும் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பதும் பின்பு மோட்டார் சைக்கிள்களில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் வந்ததையும் காண முடிந்தது. அச்சமயத்தில் சம்பந்தப்பட்ட அப்பெண்ணை அங்கு காணவில்லை.
அருகில் எடுக்கப்பட்ட காட்சிகள், முன்புற கண்ணாடியைத் தவிர மற்ற அனைத்து கண்ணாடிகளும் உடைந்திருப்பதையும், காரின் உள்ளே உடைந்த கண்ணாடித் துண்டுகள் பரவியிருப்பதையும் காட்டுகின்றன.
இந்தச் சம்பவம் நடந்த இடமும் நேரமும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.



