
கூலிம் , நவ 5 – கூலிம் Taman Perakகிலுள்ள ஒரு வீட்டில் தனது 4 வயது மகளை கொன்றுவிட்டு பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டார்.
அவ்வீட்டின் படிக்கட்டின் கூரை தூணில் உள்ள மின் விசிறியில் அவரது மற்றொரு பிள்ளையான ஏழு வயது சிறுவனை அந்த பெண் தூக்கில் தொங்கவிட்ட போதிலும் கழுத்தில் கயிறு சிக்கிக்கொண்டதால் கடுமையாக கதறியதை கேட்டு அண்டை வீட்டுக்காரர் உதவியதால் அச்சிறுவன் உயிர் தப்பினான்.
கழுத்து இறுகியதால் கடுமையான வலியினால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் கூலிம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான்.
நேற்றிரவு இந்த துயரச் சம்பவம் நடந்ததாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan சுல்கிப்ளி அஸிஸான் ( Zulfkifli Azizan) தெரிவித்தார்.
இரவு மணி 11.05 அளவில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட போலீஸ் தலைமையத்திற்கு தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து உடனடியாக அங்கு போலீஸ் குழு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது.
மூன்று அறைகளைக் கொண்ட ஒரு மாடி மலிவு விலை வீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது.அவ்வீட்டின் முதல் அறைக்குள் இருந்த கட்டிலில் 30 வயது பெண்ணின் உடலும் அவரது மகளின் உடலும் கண்டுப்பிடிக்கப்பட்டது.
தனது ஆண் நண்பர் மற்றொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்ததால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான அப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடக்கக் கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மனதில் ஏற்பட்ட காயத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இந்த முடிவை எடுத்ததற்காக அனைத்து தரப்பினருக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்ளும் கடிதத்தையும் அந்த பெண் எழுதியுள்ளார்.
மேலும் தனது பிள்ளைகளை எவரிடமும் விட்டுச் செல்ல மனமின்றி அவர்களையும் தன்னுடன் அழைத்துச் செல்வதாகவும் அப்பெண் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் என Zulfkifli கூறினார்.
மரணம் அடைந்த தாய் மற்றும் மகளின் உடல்கள் சவப்பரிசோதனைக்காக Alor Setar Sultanah Bahiyah மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



