Latestமலேசியா

பேராக்கில் 5 ஆண்டுகளுக்கு அரசு நிலங்களில் புதிய ஆலயங்களைக் கட்ட விதிக்கப்பட்ட தடை மீட்பு

ஈப்போ, ஜூன்-11 – பேராக்கில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசாங்க நிலங்களில் புதிய ஆலயங்களைக் கட்ட விதிக்கப்பட்ட தடை மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மனிதவளம், சுகாதாரம், இந்தியர் விவகாரம் மற்றும் மாநில நல்லிணக்கத் துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் A. சிவநேசன் அதனை அறிவித்துள்ளார்.

முறைப்படி விண்ணப்பித்து மாநில அரசின் ஒப்புதலுடன் ஆலயங்களைக் கட்டலாம் என்றார் அவர்.

இதனிடையே பேராக்கில் 482 பதிவுப் பெற்ற ஆலயங்கள் உள்ளன; அவற்றில் 27 ஆலயங்கள் அரசாங்க நிலங்களில் கட்டப்பட்டு பிரச்னைகளைச் சந்தித்திருந்த நிலையில், 10 ஆலயங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுக் காணப்பட்டுள்ளது.

அந்த 10 ஆலயங்களுக்கும் நிலப்பட்டா வழங்கப்பட்டு விட்டதாக, பேராக் மாநில ஆலய விவகாரங்கள் குறித்து இந்து இயக்கங்களுக்கு விளக்கமளித்த நிகழ்வுக்குப் பிறகு, சிவநேசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

மேலும் 17 ஆலயங்களின் பிரச்னைகள் மாநில ஆட்சிக் குழு கூட்டத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமென்றார் அவர்.

இவ்வேளையில், அனுமதியில்லாமல் அரசாங்க நிலங்களில் கட்டப்பட்டதால் நோட்டீஸ் வழங்கப்பட்டு, இடமாற்றத்திற்கு இடமும், மானியமும் வழங்கப்பட்ட பிறகும், இடமாறிச் செல்லாமல் பிடிவாதம் காட்டும் சில ஆலய நிர்வாகங்களின் செயல் கண்டிக்கத்தக்கது.

அது போன்ற சம்பவங்களில் ஆலயங்களை அகற்ற வேண்டிய சூழ்நிலை வந்தால், மாநில அரசு இனியும் அதில் தலையிடாது என சிவநேசன் திட்டவட்டமாகக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!