
சுங்கை பூலோ, மே-27 – டிக் டோக் நேரலையில் பேசியவை வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து, 47 வயது ஆடவர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.
மே 25-ஆம் தேதி அதிகாலை சிலாங்கூர், சுங்கை பூலோ, பண்டார் ஸ்ரீ கோல்ஃபீல்ட்ஸ் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜாலான BSC 4B/4 சாலையில் உள்ள பாதுகாவலர் சாவடியில் நடந்த அச்சண்டை முன்னதாக் 2 வீடியோக்கள் வாயிலாக வைரலானது.
அதில், மர்ம நபர்கள் சிலர் அந்த பாதுகாவலரை சரமாரியாகத் தாக்குவது தெரிகிறது.
டிக் டோக் நேரலையில், யாரையும் குறிப்பிடாமல், சண்டையைத் தவிர்ப்போம், குண்டர் கும்பல் போல் செயல்படாதீர்கள், மற்றவர்களை சினமூட்டாமல் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என பொது மக்களுக்கு அவ்வாடவர் அறிவுரை கூறியுள்ளார்.
இது சிலருக்கு பிடிக்காமல் போகவே, அவரைத் தேடிப் போய் தாக்கியிருப்பதாக, சுங்கை பூலோ போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் மொஹமட் ஹஃபிஸ் முஹமட் நோர் கூறினார்.
கலவரத்தில் ஈடுபட்டதன் பேரில் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஈராண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.