
ஜோகூர் பாரு , ஏப் 2 – கோத்தா திங்கி மலேசிய இந்து சங்கத்தின் 43ஆவது ஆண்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
ஜோகூர் ம.இ.காவின் தலைவரும் , மாநில ஆட்சிக் குழுவின் தலைவருமான ரவின்குமார் கிருஷ்ணசாமி அதிகாரப்பூர்வமாக இக்கூட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆலயத்தின் தலைவர்களும் தங்களது கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் கலாச்சார உடையின் அடையாளமாக வேஷ்டி மற்றும் சேலை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்றும், இது வெளியிலுள்ள இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் ரவின்குமார் தமதுரையில் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் கோத்தா திங்கி மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இது நல்லதொரு முயற்சி என்பதோடு இது கோத்தா திங்கி மாவட்டத்திலுள்ள ஆலய தலைவர்களின் ஒற்றுமையை மட்டுமின்றி அவர்களிடையே இருந்துவரும் புரிந்துணர்வை காட்டுவதாகவும் ரவின்குமார் குறிப்பிட்டார்.
இதற்காக கோத்தா திங்கி இந்து சங்கத்தின் தலைவர் சுப்ரமணியம் பாலகிருஷ்ணனுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் Sultanah Rogayah அறக்கட்டனையின் தலைவர் டத்தோ ஆர். சுகுமாரன் மற்றும் ஜோகூர் மாநில இந்து சங்கத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி கருப்பையா ஆகியோரும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
அதே சமயத்தில் கோத்தா திங்கி இந்து சங்கத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆலயத் தலைவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.



