
புத்ராஜெயா, ஜூன்-26 – நாடு முழுவதும் நவீன நகர நிர்மாணிப்பு மாதிரியின் சிறந்த எடுத்துக்காட்டாக கோத்தா மடானி மேம்பாட்டுத் திட்டம் இருக்க வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரும்புகிறார்.
நகரக் கட்டுமானம் என்பது மேம்பாட்டாளர்களின் விருப்பங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது; மாறாக மக்களின் நல்வாழ்வை வலியுறுத்துவதன் மூலம் விரிவான முறையில் திட்டமிடப்பட வேண்டும்.
எனவே, மாநிலங்களில் உள்ள ஊராட்சி மற்றும் நகராட்சி மன்றங்கள், நாம் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க வேண்டும்; மேம்பாட்டாளர்களுக்கு அடிபணியாமல் நாம் தான் திட்டமிட வேண்டும், மேம்பாட்டாளர்கள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் வழங்கலாம் என, புத்ராஜெயா பிரிசின்ட் 19-ல் கோத்தா மடானி மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய போது அவர் கூறினார்.
நகர்ப்புற திட்டமிடல், இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது, மாறாக அரசு ஊழியர்கள் உட்பட சமூகத்தின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
102.5 ஏக்கர் பரப்பளவில், கோத்தா மடானியின் கட்டுமானத்திற்கு 4 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன் முதல் கட்டம் 2027-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
35,000 பேர் வரை தங்கக்கூடிய 10,000 குடியிருப்புகளை வழங்குவதன் மூலம், குடியிருப்பு பற்றாக்குறை சிக்கலைத் தீர்க்கும் முயற்சிகளில் இந்தத் திட்டமும் ஒன்றாகும்.
இந்த கோத்தா மடானி தொடக்க விழாவில் பிரதமர் துறை அமைச்சர், டத்தோ ஸ்ரீ Dr சாலிஹா முஸ்தஃபா, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.