
கோலாலம்பூர், ஏப்ரல்-20, ‘சட்டவிரோதக் கோயில்கள்’ என முத்திரைக் குத்தி சமூக ஊடகங்களில் இந்து ஆலயங்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் ‘தாக்குதல்களை’ தணிக்க அரசாங்கமும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
LFL எனப்படும் Lawyers for Liberty அமைப்பு அதனை வலியுறுத்தியுள்ளது.
இவ்விவகாரம் பொறுப்பாகக் கையாளப்படவில்லை என்பதே உண்மையென, LFL இயக்குநர் சாய்ட் மாலேக் (Zaid Malek) கூறினார்.
உரிமை சர்ச்சையில் உள்ள நிலத்தில் கட்டப்பட்டிருந்தாலுமே கூட, எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் ‘சட்டவிரோதம்’ என முத்திரைக் குத்துவது முறையல்ல.
‘சட்டவிரோதம்’ எனக் குறிப்பிடுவதை அரசாங்கம் தடைச் செய்ய வேண்டும்.
மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்க, டத்தோ ஸ்ரீ அன்வாரும் இனி எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் ‘சட்டவிரோதம்’ எனக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமென, சாய்ட் கேட்டுக் கொண்டார்.
‘பொறுப்பானவர்கள்’ எனக் கூறிக் கொண்டு சமூக ஊடகங்களில் இந்த ‘சட்டவிரோதக் கோயில்கள்’ என்ற இயக்கத்தைத் தூண்டி விடும் தரப்பினரை அரசாங்கம் ஒடுக்க வேண்டும்.
இல்லையென்றால் இனங்களுக்கு இடையில் இது விரோதத்தை உண்டாக்கும் என்றார் அவர்.
விட்டுக் கொடுத்து போதல், சகிப்புத் தன்மை யோடு வாழுதல் என மலேசிய மக்களுக்கே உரித்தான பண்புகளைக் கட்டிக் காகக்க மடானி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய நிலப் பிரச்னை வெடித்தது முதல், சமூக ஊடகங்களில் இந்த ‘சட்டவிரோதக் கோயில்கள்’ விவகாரம் எழுப்பப்பட்டு வருகிறது.
அதாவது, ஊரார் நிலத்தில் கட்டப்பட்ட இந்துக் கோயில்களை அடையாளம் கண்டு புகாரளிப்போம் என ஒரு சாரார் புறப்பட்டுள்ளனர்