
கோத்தா கினாபாலு, டிசம்பர்-5 – சபா, கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடின் இன்று அதிகாலை காலமானார்.
மாநில அம்னோ – தேசிய முன்னணித் தலைவருமான 66 வயது புக் மொக்தாரின் மறைவை, அவரது மகன் Naim Kurniawan ஃபேஸ்புக் வாயிலாக உறுதிப்படுத்தினார்.
சிறுநீரக செயலிழப்பு, இருதயக் கோளாறு மற்றும் மோசமான நுரையீரல் தொற்று காரணமாக அவர் முன்னதாக கோத்தா கினாபாலுவில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போதே உடல் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சபா முன்னாள் துணை முதல்வருமான புங் மொக்தார், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் Lamag தொகுதியை வெறும் 135 வாக்குகள் வித்தியாசத்தில் தக்க வைத்துக் கொண்டார்.
Public Mutual அறங்காப்பு நிதியில் Felcra நிறுவனத்தின் RM150 மில்லியன் முதலீடு தொடர்பில் அவரும், முன்னாள் மலாய் நடிகையுமான அவரின் மனைவி டத்தின் ஸ்ரீ Zizie Izette-யும் ஊழல் வழக்கை எதிர்நோக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் தனக்கே உரிய தடாலடியான பேச்சுக்களாலும் நடவடிக்கைகளாலும் தேசிய அளவிலும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக வலம் வந்தவர் புங் மொக்தார்…
அவரின் திடீர் மறைவு அம்னோ வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சி வேறுபாடின்றி தலைவர்களும் சபா மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



