
சபா, பிப்ரவரி 24 – சபா செம்போர்னாவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில், சுற்றுலாப் பயணிகளுக்கு அபூர்வ விலங்கு இறைச்சி உணவுகள் வழங்கப்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சபா வனவிலங்கு துறை மற்றும் போலீசார் இணைந்து சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது, அதிகாரிகள் உயிருடன் இருந்த ஒரு பங்கோலினை (Pangolin) அதாவது முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கைப் பறிமுதல் செய்தனர். மேலும், பாதுகாக்கப்பட்ட விலங்குகளைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் சில உணவு வகைகளும் கைப்பற்றப்பட்டன.
சட்டப்படி பங்கோலினை வைத்திருப்பது அல்லது உணவாக வழங்குவது குற்றமாகும். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிலர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட விலங்குகளை உணவாக வழங்குவது சட்ட விரோதமானது மட்டுமல்லாமல், சபாவின் சுற்றுலா பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



