
சபா, ஜனவரி 23 – லஹாட் டத்து நகரை நோக்கிச் செல்லும் Jalan Pantai சாலையில், இன்று காலை நடந்த விபத்தில், வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கழிவுநீர் குழியில் விழுந்ததில் ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காலை சுமார் 7 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், டொயோட்டா வாகனத்தின் முன்பக்க பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிய 34 வயதுடைய நபருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விபத்தின் போது, இருவரும் 7 மீட்டர் ஆழமும், 6.5 மீட்டர் அகலமும் கொண்ட, கழிவுநீர் குழிக்குள் சிக்கினர். அவசர தகவல் கிடைத்தவுடன், லஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த 14 வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தில் பயணி உயிரிழந்ததை சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும் காயமடைந்த ஓட்டுநர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



