
பூச்சோங், பிப்ரவரி-14 – இஸ்லாம் அல்லாதோரின் விவகாரங்களைக் கையாள பிரதமர் துறையில் தனியாக ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டுமென்பது, ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் Chow Yu Hui-யின் தனிப்பட்ட கருத்தாகும்.
அதற்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை; அமைச்சரவைக்கு அப்பரிந்துரையில் உடன்பாடும் இல்லையென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
நமக்கு இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் இருக்கிறார்; தனியாக ஒற்றுமைத் துறை அமைச்சரும் இருக்கிறார்; இது தவிர சர்வ சமய நல்லிணக்க மன்றமும் உள்ளது; மதம் சார்ந்த விஷயங்களைக் கையாள இவையே போதுமானவை என பிரதமர் சொன்னார்.
இவற்றுக்கெல்லாம் மேல், அமைச்சரவை நியமனமானது பிரதமரின் தனிப்பட்ட அதிகாரமாகும்; எனவே அது குறித்து மற்றவர் கேள்வி எழுப்பும் பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.
பிரதமர் துறையில் சமய விவகாரங்களுக்கான அமைச்சை, இஸ்லாம் மற்றும் இஸ்லாம் அல்லாத அமைச்சுகள் என இரண்டாகப் பிரிக்குமாறு, அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான Chow Yu Hui முன்னதாக பரிந்துரைத்தார்.
பல்லின மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும், எந்தவொரு தரப்பும் புறக்கணிக்கப்படாதிருப்பை உறுதிச் செய்யவும், அது அவசியமாகும்.
எனவே, இஸ்லாம் அல்லாத அமைச்சுக்கு, முஸ்லீம் அல்லாதோர் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கொண்ட ஒருவரை அமைச்சராக நியமிக்கலாம் என மக்களவையில் அவர் பேசியிருந்தார்.
இரு அமைச்சர்கள் இருப்பதன் மூலம், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மேலும் நியாயமாகக் கையாள முடியும் என அவர் கூறியிருந்தது, முஸ்லீம்கள் மத்தியில் கண்டனத்தைப் பெற்ற நிலையில், பிரதமர் இன்று அதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.