Latestமலேசியா

சமூக ஊடகப் பயனர்களுக்கான வயது வரம்பு சட்டமாக இயற்றப்படாது; ஃபாஹ்மி உறுதி

கோலாலம்பூர், டிசம்பர்-9, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான வயது கட்டுப்பாடு தொடர்பில், சட்டத்தில் திருத்தம் செய்யவோ அல்லது புதியச் சட்டத்தை இயற்றவோ மலேசியா எண்ணம் கொண்டிருக்கவில்லை.

அவ்விஷயத்தில் ஆஸ்திரேலியாவைப் பின்பற்றும் திட்டமேதும் அரசாங்கத்துக்கு இல்லையென, தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் (Fahmi Fadzil) கூறியுள்ளார்.

என்றாலும், வயதுக் கட்டுப்பாடு தொடர்பான நடப்பு வழிகாட்டி கோட்பாடுகளை ஒவ்வொரு பயனரும் பின்பற்றுவதை சமூக ஊடகங்கள் உறுதிச் செய்ய வேண்டும்.

அதற்கான verification சரிபார்ப்பு முறையை செயல்படுத்தும் விதம் குறித்தும், அவை அரசிடம் விளக்கியாக வேண்டுமென ஃபாஹ்மி சொன்னார்.

வரும் ஜனவரி 1 முதல் சமூக ஊடகங்களுக்கான கட்டாய உரிம விதிமுறை அமுலுக்கு வந்ததும், அதில் அரசாங்கம் தீவிர காட்டும்.

ஒருவேளை சமூக ஊடகங்களால் அதனைச் செயல்படுத்த முடியாவிட்டால், அவற்றுடன் தொடர் கலந்தாய்வுகள் நடத்தப்படுமென்றார் அவர்.

16 வயதுக்குக் கீழ்பட்டோர் பயன்படுத்த முடியாதென, அந்தந்த சமூக ஊடகங்களே, தத்தம் விதிமுறைகளில் கூறியிருப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் சட்ட மசோதாவை ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் அண்மையில் நிறைவேற்றியது.

அப்புதியச் சட்டத்தின் கீழ், வயது குறைந்த சிறார்கள் சமூக ஊடகங்களில் நுழைவதைத் தடுக்க, சமூக ஊடக நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தவறினால் 32 மில்லியன் அமெரிக்க டாலர் வரையில் அவற்றுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!