Latestமலேசியா

சரிந்து வரும் பிறப்பு விகிதம்; சீனர்களின் பிரதிநிதித்துவம் பாதிப்படையலாம் என MCA கவலை

கோலாலம்பூர், மே-17 – மலேசிய சீன சமூகத்தில் சரிந்து வரும் பிறப்பு விகிதம், இந்நாட்டு அரசியல் சூழலில் அவர்களின் இடத்தையே ஆட்டம் காண செய்து விடுமென, மலேசிய சீனர் சங்கமான MCA-வின் மகளிர் பிரிவு பெரும் கவலைத் தெரிவித்துள்ளது.

தேசியப் புள்ளிவிவரத் துறையின் தகவலின் படி, இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில் வெறும் 7,350 சீனக் குழந்தைகளே பிறந்துள்ளன.

கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிட்டால் இதுவொரு மோசமான சரிவாகும்.

சீன சமூகம், ஒரு மக்கள் தொகை, சமூக மற்றும் கலாச்சார நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதற்கான கடும் எச்சரிக்கைக்கான அறிகுறியே இதுவென MCA மகளிர் தலைவி வோங் யூ ஃபாங் கூறினார்.

இந்தப் போக்கு தொடர்ந்தால், மக்கள் தொகை குறைந்து சொந்த நாட்டிலேயே நாம் ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மையினராக மாறுவதற்கான சாத்தியமுண்டு.

அது நடந்தால், சீனர்களின் அரசியல் பிரதிநிதித்துவம், பொருளாதார செல்வாக்கு மற்றும் கலாச்சார இருப்பு பலவீனமடையும் என்றார் அவர்.

பிறப்பு விகித சரிவு, இளம் குடும்பங்களின் பொருளாதார சவால்களிலிருந்து நேரடியாக உருவாகிறது என்பதை வோங் ஒப்புக்கொண்டார் – அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், கல்விச் செலவு, வீட்டுவசதியின்மை, போதுமான குழந்தை பராமரிப்பு தேர்வுகள் இல்லாதது மற்றும் பெண்களுக்கு வேலை-வாழ்க்கை சமநிலை அழுத்தங்கள் போன்றவை அதற்குக் காரணமாக உள்ளன.

அர்த்தமுள்ள தலையீடு இல்லாமல் இவ்விவகாரம் மோசமடைந்து வருகிறது.

ஒரு சமூகமாகவும் தேசமாகவும் எதிர்காலத்தைப் பற்றி உண்மையிலேயே அக்கறைக் கொண்டிருந்தால், இப்போதே உரிய தடுப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டுமென்றார் அவர்.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் மலேசியாவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெறும் 93,500 குழந்தைகளே பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டை விட இது 11.5 விழுக்காடு சரிவாகும்.

இந்தியக் குழந்தைகளின் பிறப்பும் கடந்தாண்டை விட 0.4 விழுக்காடு சரிந்து வெறும் 3.8 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!