
கோலாலம்பூர், ஜனவரி-26-சிங்கப்பூருக்கு அடிக்கடி செல்வோர் STR ரொக்க உதவியைப் பெற தகுதியற்றவர்கள் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
மாதத்திற்கு 8 முறை அல்லது அதற்கு மேல் சிங்கப்பூருக்கு செல்வோர், வெளிநாட்டில் வேலை செய்பவர்களாக கருதப்படுவர்.
எனவே, அவர்களின் STR விண்ணப்பம் _“Tidak Lulus”_ எனக் காட்டப்படும் என, துணையமைச்சர் Liew Chin Tong கூறினார்.
வெளிநாடுகளில் வசிப்போர், அவர்களின் வாழ்க்கைத் துணை, வெளிநாடுகளில் வேலை செய்வோர், மேற்கல்வி பயில்வோர் போன்றோர் இந்த _”Tidak Lulus”_ பிரிவில் வருவர்.
பெறுநர் மலேசியாவில் வசிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த STR உதவி வழங்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே, ஒருவர் தற்காலிகமாக வெளிநாடு செல்கிறாரா அல்லது அங்கேயே தங்குகிறாரா, வேலை செய்கிறாரா என்பதையெல்லாம், உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN முடிவுச் செய்யும்.
அதாவது மாதத்திற்கு 1 முதல் 7 முறை வெளிநாடு செல்வது… அதுவும் சிகிச்சை, ஆபத்து அவசரம், குறுகிய பணிகள் அல்லது குடும்ப காரணங்களுக்காக இருந்தால், அது அனுமதிக்கப்படும்.
அதே சமயம், _logistic_ நிறுவனங்களின் லாரி ஓட்டுநர்கள் போன்ற மலேசியர்கள் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வர வேண்டியிருக்கும் என்பதையும் அரசாங்கம் புரிந்துகொள்கிறது.
ஆக, இந்த விதிமுறையால் அவர்கள் பாதிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யலாம்; இவ்வாண்டு முழுவதும் அதற்கு வாய்ப்புண்டு.
STR உதவி நியாயமாகவும், இலக்கு வைக்கப்பட்டவர்களுக்கும், சென்றடைய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் என துணையமைச்சர் சொன்னார்.



