
லண்டன், மே 30 – இந்த வார தொடக்கத்தில் லிவர்பூலின் பிரீமியர் லீக் பட்டத்தை கொண்டாடிய ரசிகர்கள் கூட்டத்திற்குள் காரை மோதியதாக 53 வயது நபர் மீது பிரிட்டன் போலீசார் ஏழு குற்றச்சாட்டுக்களை கொண்டு வந்தனர். வடமேற்கு இங்கிலாந்து நகரில் திங்கட்கிழமை நடந்த சம்பவத்தின் போது, பால் டாய்ல் ( Paul Doyle ) என்ற ஆடவர் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது மற்றும் வேண்டுமென்றே கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
லிவர்பூல் ஆதரவாளர்கள் மீது Ford Galazy மோதியதில் ஒன்பது வயது முதல் 78 வயதுக்கிடையிலான 79 பேர் காயமடைந்தனர். எழுவர் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். லிவர்பூல் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த டாய்ல், கொலை முயற்சி, போதைப்பொருளுடன் வாகனம் ஒட்டியது, மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் திங்களன்று கைது செய்யப்பட்டார். டாய்ல் ஒரு தொழிலதிபர் மற்றும் முன்னாள் கடற்படை வீரர் என்றும், அவருக்கு மூன்று பதின்ம வயது பிள்ளைகள் இருப்பதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.