Latestமலேசியா

சிரம்பானில் வர்த்தக மையத்தில் பல முறை பாராங் கத்தியால் தாக்கப்பட்ட ஆடவர் காயம்

சிரம்பான், ஏப் 15 – சிரம்பானில் நேற்றிரவு வர்த்தக மையம் ஒன்றில் நடந்த சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் பாராங் கத்தியை பயன்படுத்தி ஒருவரை கடுமையாக தாக்கி காயப்படுத்தினார்.

இரவு 7 மணியளவில் நடந்த இந்த சம்பவம், அந்த வர்த்தக மையத்தின் சிசிடிவி யில் பதிவானதை தொடர்ந்து , சமூக ஊடகங்களில் வைரலானது. நெரிசலான பகுதியில் பாராங் கத்தி வைத்திருந்த ஒருவர் பாதிக்கப்பட்டவரை சாதாரணமாக வெட்டுவதைக் காட்டியது.

பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சம்பவம் நடந்ததாக தனது தரப்பினர் நம்புவதாகக் சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் ஹட்டா சே தின் கூறினார்.

இரவு சுமார் 8.15 மணியளவில் 40 வயது நபர் ஒருவரை பாராங் கத்தியால் வெட்டிய சம்பவம் குறித்து போலீஸ் துறைக்கு தகவல் கிடைத்ததோடு இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

பாதிக்கப்பட்டவர் புகைபிடித்துக்கொண்டே தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அந்த வர்த்தக வளாகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது. மின் படிக்கட்டு மூலம் ஓடிவந்த ஒரு குழுவைக் கண்ட அந்த நபர் திடுக்கிட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக முகமட் ஹட்டா கூறினார்.

அவர்களில் ஒருவர் பாராங் கத்தி வைத்திருந்தார். தாக்குதலுக்கு உள்ளான ஆடவர் கத்திக் குத்துக்கு உள்ளான போதிலும் அவர் எழுந்து ஓடியதால் இச்சம்பவத்தை பார்த்த மற்றொருவர் அவரை காப்பாற்றியுள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அந்த நபர் கைகள்,முதுகு மற்றும் வலது காலிலும் காயத்திற்கு உள்ளானார். அவரது நிலைமை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!