
வாஷிங்டன், ஜனவரி-3 – கோடீஸ்வரர் இலோன் மாஸ்க்கின் xAI நிறுவனம் உருவாக்கிய Grok எனும் AI chatbot சிறார்கள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை ‘உடை கழற்றியப்’ போல மாற்றியமைத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து அச்செயலி மீது உலகளவில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
X தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட AI chatbot-டான Grok, பயனர்கள் X-சில் உள்ள எந்தவொரு படத்தையும் மாற்ற அனுமதிக்கிறது.
இதனைப் பயன்படுத்தி உரியவரின் அனுமதியின்றி அவரின் புகைப்படத்தை ஓரளவோ அல்லது முழுமையாகவோ டிஜிட்டல் முறையில் ஆடைகளை அவிழ்க்க அச்செயலி பயன்படுத்தப்பட்டு, X தளமே ஆபாசப் படங்களால் நிரம்பி வழிந்ததாகக் கூறப்படுகிறது.
இது சர்ச்சையாகி, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அரசாங்கங்கள், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என xAI-யை வலியுறுத்துகின்றன.
xAI நிறுவனத்திற்கு எதிராக பிரான்சும் இந்தியாவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் xAI நிறுவனம், தன் AI அமைப்பு எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்க வேண்டிய அழுத்தத்தில் உள்ளது.
இச்சம்பவத்தால் செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கு கடுமையான சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
இவ்விவகாரம், தொழில்நுட்ப உலகிற்கு ஒரு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுவதுடன், குறிப்பாக சிறார்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் புதுமை மற்றும் பொறுப்புணர்வு இரண்டையும் சமநிலைப்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளது.



