
கோலாலம்பூர், ஏப்ரல்-24- புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஹரி ராயா விருந்தில் கட்டணம் வாங்கிக் கொண்டு தாம் பாடியதாகக் கூறப்படுவதை, நாட்டின் முதல் நிலை பாடகி டத்தோ ஸ்ரீ சித்தி நூர்ஹாலிசா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
“நேற்று முன்தினம் நடைபெற்ற அந்நிகழ்வுக்கு நான் ஒரு விருந்தினராகவே சென்றேன்; மாறாக கட்டணம் வாங்கிக் கொண்டு கச்சேரிக்குச் செல்லவில்லை” என தனது Instagram Story-யில் அவர் தெளிவுப்படுத்தினார்.
விருந்தினராகச் சென்ற இடத்தில், KKM பணியாளர்களை மகிழ்விப்பதற்காக நானாகவே ஓரிரு பாடல்களைப் பாடினேன்; அவ்வளவுதான் என்றார் அவர்.சமூக ஊடகங்களில் பரவியுள்ள அவதூறுகளை நிறுத்துதற்காக இந்த விளக்கத்தை அளிப்பதாக சித்தி கூறினார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற KKM-மின் ஹரி ராயா விருந்து குறித்த புகைப்படங்களை அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் முன்னதாக தனது facebook பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.
அதில் சித்தி நூர் ஹாலிசா, பாப் இசை பாடகர் டத்தோ ஜமால் அப்துல்லா உள்ளிட்டோரின் படைப்புகள் அடங்கிய புகைப்படங்களும் இருந்தன.
இதைப் பார்த்த நூற்றுக்கணக்கான வலைத்தளவாசிகள், சித்தி நூர்ஹாலிசாவை அழைத்து வந்து பாட வைக்கும் அளவுக்கு KKM-முக்கு இந்த ‘ஆடம்பரம்’ தேவையா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வந்தது? கீழ்நிலை பணியாளர்கள் வேலைப்பளுவால் அவதியுறும் போது உங்களுக்கு மட்டும் ‘இராஜ’ உபசரிப்பா? என சில சுகாதார பணியாளர்களே சாடியதும் கவனத்தை ஈர்த்தது.
அதில் தன் பெயரும் இழுக்கப்பட்டதை அடுத்தே சித்தி நூர்ஹாலிசா இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.