
அலோர் ஸ்டார், நவம்பர்-20- சுங்கை பட்டாணி, பெடோங்கில் மீ மற்றும் குவைத்தியாவ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பெர்மிட் இல்லாமல் வேலை செய்த வெளிநாட்டவர்களுக்கு எதிரான சோதனையில், ஒரு கைத்துப்பாக்கியும் தோட்டாக்களும் சிக்கியதால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
Jalan Semeling-கில் உள்ள அத்தொழிற்சாலையில் நவம்பர் 11-ஆம் தேதி 17 வெளிநாட்டவர்கள் கைதானதை அடுத்து, இரு வேறு சோதனைகளில் அந்த சுடும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
கைதானவர்களில் இருவர் இந்தியப் பிரஜைகள், 10 பேர் வங்காளதேசிகள், 1 பெண் உள்ளிட்ட 5 மியன்மார் நாட்டவர்கள் என கெடா போலீஸ் தலைவர் Datuk Adzli Abu Shah கூறினார்.
இந்தியப் பிரஜைக்கு அந்த கைத்துப்பாக்கியை விநியோகம் செய்த சந்தேகத்தில், நவம்பர் 15-ஆம் தேதி லங்காவியில் 45 வயது உள்ளூர் ஆடவர் ஒருவரும் கைதானார்.
மோசடி, மிரட்டல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேக நபருக்கு 3 குற்றப்பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து விசாரணைக்காக அந்நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



