
கோலாலம்பூர், மார்ச் 17-சுபாங் ஜெயாவில் நேற்று மாலையில் அடுக்ககம்
ஒன்றில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஸகைலிப்ட் ஒன்று விழுந்ததில் இரண்டு ஆடவர்கள் மரணம் அடைந்ததோடு ஒருவர் காயம் அடைந்தார்.
மாலை மணி 3.50 அளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து அவசர அழைப்பின் முலம் தங்களது தரப்பு தகவலை பெற்றதாக சுபாங் ஜெயா மாட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் ( Wan Azlan Wan Mamat ) தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அடுக்குமாடிக் குடியிருப்பின் நுழைவாயிலில் மூவரின் உடல்கள் காணப்பட்டன.
அவர்களில் தலை மற்றும் உடலின் பல பாகங்களில் கடுமையாக காயத்திற்கு உள்ளான இருவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இறந்தனர்.
மற்றொருவர் தலை மற்றும் மார்புப் பகுதிகளில் காயமடைந்தார். 38 முதல் 46 வயதுக்குட்பட்ட, வெளிநாட்டவர்களான அந்த மூன்று பேரும், ஸ்கைலிப்ட் பயன்படுத்தி ஐந்தாவது மாடியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக செர்டாங்கில் உள்ள சுல்தான் இத்ரிஸ் ஷா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டன. காயமடைந்த நபரும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.



