
கோலாத் திரெங்கானு , அக் 21 – பெண் வர்த்தகர் ஒருவர் தனது பங்குதாரரை கொலை செய்ததாக கோலாத்திரெங்கானு உயர்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 36 வயதுடைய நோராய்னி ரெமாலி ( Nooraini Remali ) தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி விடியற்காலை மணி 3.20க்கும் 4 மணிக்குமிடையே உலு திரெங்கானுவில் டெலிக்கோம் மலேசியா பாதுகாவலர் குடிலுக்கு முன் 65 வயதுடைய நோர்ஸிஹான் ( Norzihan Abdul Karim ) என்ற பெண்ணை கொலை செய்ததாக நீதிபதி டத்தோ ஹசான் அப்துல் கனி ( Hassan Abdul Ghani) முன்னிலையில் நோராய்னி குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்கும் குறையாத அல்லது 40 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படியும் விதிக்கப்படலாம்.
நோராய்னிக்கு எதிரான குற்றச்சாட்டு மீண்டும் நவம்பர் 17ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும். 15 முறை கத்திக் குத்துக்கு உள்ளான பெண் வர்த்தகர் ஒருவர் கால்வாயில் இறந்து கிடப்பதை பாதுகாவலர் ஒருவர் கண்டு போலீசிற்கு தகவல் தெரிவித்ததாக குற்றப் பத்திரிகையியில் தெரிவிக்கப்பட்டது.