
செந்தூல் உணவு வளாகத்தில் மோதல்; 10 பேர் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி 9
கடந்த சனிக்கிழமை இரவு செந்தூல் தாமான் பெரிங்கினிலுள்ள Kafe பெரிங்கின் உணவு வளாகத்தில், இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை தொடர்பாக 10 உள்ளூர் ஆண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆடவர் ஒருவர் ஒரு சிறுவனை கன்னத்தில் அறைந்ததுதான் இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்ததென்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக செந்துல் மாவட்ட காவல் துறை தலைவர் Asisten Komisioner Ahmad Sukarno Mohd Zahari தெரிவித்தார்.
போலீஸாருக்கு புகார் அளித்த 33 வயதுடைய கேட்டரிங் பணியாளர் கூறுகையில், சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டதை அவர் கவனித்ததாகவும், முகத்தை பிடித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை பார்த்ததாகவும் தெரிவித்தார். அந்த சிறுவன், தன்னை அடையாளம் தெரியாத ஒருவர் அறைந்ததாக கூறியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், மது அருந்திய நிலையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சிலர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரை தாக்கியதாக போலீஸார் தெரிவித்தனர். இதில் ஒருவர் அவரை குத்தியதாகவும், மற்றொருவர் ஹெல்மெட்டை எறிந்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் நண்பர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் அறியப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக 28 முதல் 41 வயதுடைய 10 உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கலவரம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில், விசாரணைக்காக 3 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, அந்த Kafe- யில் நடந்த மோதலை காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.



