
கோலாலம்பூர், மே-30 – தற்போது நாட்டைத் தாக்கி வரும் வெப்பமான வானிலை ஓர் அசாதாரண நிகழ்வு அல்ல, மாறாக ஒவ்வோர் ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வழக்கமான சூழ்நிலை தான்.
MET Malaysia எனப்படும் மலேசிய வானிலை ஆராய்ச்சி மையம் அவ்வாறு தெரிவித்துள்ளது.
மே 10-ஆம் தேதி தொடங்கிய இந்த தென்மேற்கு பருவமழைக் காலம் செப்டம்பர் மத்தி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்காலக் கட்டத்தில், குறைந்த காற்று ஈரப்பதம் மற்றும் நிலையான வளிமண்டல நிலைமைகள் காரணமாக நாட்டில் வானிலை பொதுவாக வறண்டதாக இருக்கும் என, MET Malaysia தலைமை இயக்குநர் ஜெனரல் Dr மொஹமட் ஹிஷாம் மொஹமட் அனிப் கூறினார்.
தென்மேற்கு பருவ மழையானது இயற்கையாகவே வறண்ட வானிலை, குறைந்த மேகமூட்டம் மற்றும் குறைந்த மழைப்பொழிவைக் கொண்டு வரும்.
இந்தச் சூழ்நிலை பூமியின் மேற்பரப்பை அதிக சூரிய ஒளி அடையச் செய்கிறது, இதனால் தான் தினசரி வெப்பநிலை அதிகரிக்கிறது.
எனவே, மற்ற காலகட்டங்களை விட, இக்காலக் கட்டத்தில் மழை இல்லாத நாட்கள் அதிகமாக இருக்குமென்றார் அவர்.
இருப்பினும், பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை அவ்வப்போது பல இடங்களில் பெய்யக்கூடும்.
தீபகற்பத்தின் மேற்குப் பகுதி, வடக்கு சரவாக் மற்றும் மேற்கு சபாவில் அதிகாலையிலும், தீபகற்பத்தின் உள் மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், மேற்கு மற்றும் உட்புற சரவாக் மற்றும் உட்புற சபாவில் மாலையிலும் அதிகாலையிலும் பெய்யும் மழையும் அதிலடங்கும் என அவர் கூறினார்.