
காஜாங், பிப் 10 – சிறிய சாலை விபத்தைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 79 வயதான ஆடவரை தாக்கியதோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக 52 வயது வர்த்தகருக்கு இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 5 ,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட்து.
சைபுல் அட்லி யூசோப் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தனக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்டார். லியு கூன் பூ என்பவரின் முகம் மற்றும் உடலில் அடித்து உதைத்து காயப்படுத்தியதாக மாஜிஸ்திரேட் பாத்தின் டயனா ஜலில் ( Fatin Dayana Jalil ) முன்னிலையில் சைபுல் மீது முதல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்டவரை கொலை செய்வதாக மிரட்டியாகவும் அந்த நபர் மீது இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் புரோட்டான் வீரா காரை ஓட்டிச் சென்றபோது, பிற்பகல் 3.45 மணியளிவில் குற்றம் சாட்டப்பட்டவரின் டொயோட்டா வெல்பயர் வாகனத்தில் மோதியதைத் தொடர்ந்து அவருடன் சைபுல் தகராறில் ஈடுபட்டார்.
இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் மொத்தம் 5,500 ரிங்கிட் விதிக்கப்பட்டதோடு அபராதம் செலுத்தத் தவறினால் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கும்படி சைபுலுக்கு மாஜஸ்திரேட் உத்தரவிட்டார்.
இந்த தாக்குதல் தொடர்பான 1 நிமிடம் 20 வினாடிகளைக் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து இச்சம்பவம் பரவலான கவனத்தைப் பெற்றது.



