
கோலாலம்பூர், பிப் 6 – செராசில் நேற்றிரவு வர்த்தக வளாகத்திலுள்ள உணவுக் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல்வேறு குடிநுழைவு விதிகளை மீறியதன் தொடர்பில் 152 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
முறையான ஆவணங்கள் இன்றி அங்குள்ள உணவகங்களில் வேலை செய்துவரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட Ops Selera மற்றும்
Ops Sapu சோதனை நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறையின் நடவடிக்கைக்கான துணை தலைமை இயக்குநர் டத்தோ லோக்மான் எப்பெண்டி ரம்லி ( Lokman Effendi Ramli ) தெரிவித்தார்.
இரவு 8 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிகையில்
890 தனிப்பட்ட நபர்கள் சோதனையிடப்பட்டனர். அவர்களில் 458 வெளிநாட்டினர் மற்றும் 432 மலேசியர்களும் அடங்குவர்.
மியன்மார், சீனா, இந்தோனேசியா மற்றும் வங்காளதேசத்தை 82 ஆடவர்களும்
70 பெண்களும் கைது செய்யப்பட்டனர். பயண ஆவணங்களை கொண்டிருக்காதது, பாஸ் நிபந்தனைகளை மீறியது , நாட்டில் கூடுதல் நாட்கள் தங்கியிருந்தது உட்பட குடிநுழைவு சட்டத்தின் கீழ் பல்வேறு விதிகளை மீறியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்த வர்த்தக மையத்தில் உள்ள உணவுக் கடைகளில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்வதாக பொதுமக்களிடமிருந்து புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, ஒரு வார காலமாக வேவு தகவல்கள் திரட்டப்பட்ட பின்னர் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக லோக்மான் எப்பெண்டி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.



