
கோலாலம்பூர், ஏப் 17 -அங்கத்தான் பெர்சத்து அனக் மூடா (ARMADA) நிதி தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகள் மற்றும் அது தொடர்பான 7 ஆண்டு சிறைத் தண்டனை , இரண்டு பிரம்படி, 10 மில்லியன் ரிங்கிட் அபராத தொகையை எதிர்த்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் அப்துல் சைட் அப்துல் ரஹ்மான் ( Syed Saddiq Syed Abdul Rahman ) செய்திருந்த மேல் முறையீடு மீதான வழக்கு விசாரணை இன்று ஒரு முடிவுக்கு வந்தது.
தீர்ப்புக்கான தேதியை நிர்ணயிப்பதற்காக மேல் முறையீடு நீதிமன்றம் மீண்டும் ஏப்ரல் 24ஆம்தேதி கூடும் என மூவர் கொண்ட விசாரணைக்கு தலைமையேற்ற நீதிபதி Ahmad Zaidi Ibrahim இன்று தெரிவித்தார்.
33 வயதான சைட் சாடிக்கின் மேல்முறையீட்டின் மீதான முடிவு, அவர் தனது குற்றச்சாட்டுகள் மற்றும் தண்டனையை ரத்து செய்வதில் வெற்றி பெறுகிறாரா அல்லது குற்றவாளியாகவே நீடிப்பாரா என்பது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டத்தோ Ahmad Zaidi Ibrahim, டத்தோ Azman Abdullah மற்றும் டத்தோ Noordin Badaruddin ஆகியோர் முடிவு செய்வார்கள்.
ARMADA நிதியுடன் தொடர்புடைய நான்கு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு , சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பணமோசடி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறிந்த பின்னர் முன்னாள் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சருமான சைட் சாடிக்கிற்கு சிறை தண்டணை, பிரம்படி மற்றும் அபராதம் விதிப்பதாக கடந்த 2023ஆம்ஆண்டு நவம்பர் 9ஆம்தேதியன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ Azhar Abdul Hamid தீர்ப்பளித்திருந்தார்.
அந்த தீர்ப்பை எதிர்த்து சைட் சாடிக் மேல்முறையீடு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். நான்கு குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்கப்படுவதற்கும், சம்பந்தப்பட்ட தண்டனைகளை ரத்து செய்வதற்கும் 18 காரணங்களை தனது மேல் முறையீட்டில் சைட் சாடிக் சமர்ப்பித்திருந்தார்.