
பஹாவ், மே-26 – நெகிரி செம்பிலான், ஜெம்போல், ஃபெல்டா லூய் பாராட்டில் சனிக்கிழமை பிற்பகலில் வீசியது புயல் காற்றல்ல; மாறாக சூறாவளியே என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அச்சம்பவத்தில் கூரைகள் பறந்தது உட்பட 83 வீடுகள் சேதமடைந்தன.
இது தவிர கம்போங் பாரு ஆயர் ஹீத்தாமில் 9 வீடுகளும் கம்போங் டூசாட்டில் ஒரு வீடும் சேதமுற்றன.
இதற்கு முன்பும் இங்கு புயல் வீசியுள்ளது; ஆனால் இவ்வளவு வலுவானதாக இல்லை.
ஆக கண்டிப்பாக இது சூறாவளி தான் என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
பலத்த மழையின் போது திடீரென கதவு திறந்து வரவேற்பறையில் வேகமான காற்று புகுந்தது.
காற்று சுழன்றதில் வீட்டிலிருந்த பொருட்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டன; கூரையும் பிய்த்துக் கொண்டு பறந்ததாக, 48 வயது வீடாவாத்தி காலிப் கூறினார்.
சுமார் 10 நிமிடங்களுக்கு நீடித்த அந்த பதட்டமான சூழலில், பயத்தில் அலறிய 2 பெண் பிள்ளைகளைக் கட்டியணைத்துக் கொண்டு அறையிலேயே பாதுகாப்புத் தேடியதாக அவர் சொன்னார்.
நல்ல வேளையாக வீட்டிலிருந்த 14 பேருக்கும் எதுவும் ஆகவில்லை என்றார் அவர்.
இவ்வேளையில், லூய் பாராட் தேசிய இடைநிலைப் பள்ளியின் மாணவர் தங்கும் விடுதியின் உணவு மாடமும் அதில் சேதமுற்றது.
வியாழக்கிழமை பள்ளி விடுமுறை தொடங்குவதால், உணவு மாடம் மூடப்பட்டு பழுது பார்க்கப்படுமென பள்ளி நிர்வாகம் கூறியது.
இந்தப் புயல்-சூறாவளி சம்பவத்தில் காய விவரங்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை.