
ஜோகூர் பாரு, ஜூன்-22 – ஜோகூர் பாரு, தாமான் மெகா ரியா அருகேயுள்ள கோத்தா புத்ரி தொழிற்பேட்டையில் சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில், நேற்று காலை பெருந்தீ ஏற்பட்டது.
இதில் மொத்தமாக 5 தொழிற்சாலைகளும் 15 வாகனங்களும் முற்றாக சேதமடைந்தன.
பயன்படுத்தப்பட்ட கருப்பு எண்ணெய் சேமிப்புக் கிடங்கு, சவர்க்காரம் தயாரிக்கும் தொழிற்சாலை, லாரிகள் நிறுத்துமிடம் ஆகியவை முழுமையாகச் சேதமடைந்த பகுதிகளாகும்.
கார் கழுவும் பட்டறை ஒன்று பகுதி சேதமடைந்தது.
தவிர, 5 எண்ணெய் டாங்கி லாரிகள், 5 மோட்டார் சைக்கிள்கள், 3 தனியார் வாகனங்களும் கருகிப் போயின.
நேற்று நண்பகல் அளவில் ஏற்பட்ட அத்தீயில் நல்லவேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
9 தீயணைப்பு வண்டிகளில் வந்த 34 வீரர்கள் தீயை அணைக்கப் போராடினர்.
சில மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு தீ முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
அருகிலுள்ள பொது மக்கள், பாதுகாப்புக் கருதி தற்காலிமாக அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டனர்.
அப்பகுதி வசிப்பதற்கு பாதுகாப்பானதே என உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் அங்கு திரும்ப அனுமதிக்கப்படுவர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது.
வானில் பல மீட்டர் உயரத்திற்கு கரும்புகை மேலெழும்பியக் காட்சிகள் அடங்கிய வீடியோக்களும் புகைப்படங்களும் முன்னதாக நாடு முழுவதும் வைரலாகின