
புதுடில்லி – மே 23 – டில்லியில் பல நாட்கள் 40 டிகிரி செல்சியஸை தாண்டிய கடுமையான வெப்ப அலைக்குப் பிறகு , புதன்கிழமை மாலை திடீரென வீசிய புயல் டில்லி – என்சிஆரைத் தாக்கியது. பலத்த காற்று, கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால், தலைநகரின் சில பகுதிகள் இருளில் மூழ்கியதோடு , தினசரி வாழ்க்கை சீர்குலைந்தது. டில்லியில் இருவர் மற்றும் என்சிஆரில் மூவர் என குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர், அதே நேரத்தில் மரங்கள் சரிந்து கட்டமைப்பு சேதம் உள்ளிட்ட புயல் தொடர்பான சம்பவங்களில் பலர் காயமடைந்தனர். டில்லியில் 13 விமானங்கள் திருப்பி விடப்பட்டன, டெல்லி மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டன, மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்து வெள்ளத்தில் மூழ்கியதால் முக்கிய சாலைகள் மூழ்கியதில் போக்குவரத்து நிலைகுத்தியது.
மதுரா சாலை, Akshardham, Sikandra ஆகிய சாலைகளிலும் ITO போன்ற பகுதிகளில் நீர் தேங்கி, இடிபாடுகள் விழுந்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டன. மின் கம்பங்கள் மற்றும் மேல்நிலைக் கம்பிகள் கிளைகள் விழுந்து சேதமடைந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மணிக்கு 79 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாலும், திடீரென பெய்த ஆலங்கட்டி மழையாலும் இண்டிகோ விமானம் நடுவானில் அவசரநிலையை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாலும், பலரையும் புயல் உலுக்கியது. மரங்கள் விழுந்து வாகனங்கள் சேதமடைந்தது, மற்றும் அறிவிப்பு பலகைகள் இடிந்து விழுவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டது. இதுவரை கண்டிராத கடுமையான புயல் இதுவென மக்கள் வருணித்தனர்.