
கோலாலாம்பூர், ஜனவரி-29 – கோலாலாம்பூர், செகாம்புட்டில் 4 ஆடவர்கள் கைதானதை அடுத்து, homestay தங்கும் விடுதியை போதைப்பொருள் சேமிப்புக் கிடங்காக மாற்றியிருந்த கும்பல் முறியடிக்கப்பட்டது.
செவ்வாய்க் கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில் 261 கிலோ கிராம் எடையில் சுமார் RM13 மில்லியன் மதிப்பிலான ஷாபு வகைப் போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
13 சாக்குகளில் 250 பிளாஸ்டிக் தேநீர் பொட்டலங்களுக்குள் போதைபொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக, கோலாலாம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ Fadil Marsus செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
முறையே 2 இந்தியர்கள் 2 சீனர்களான சந்தேக நபர்கள் 23 முதல் 32 வயதிலானவர்கள் ஆவர்; அந்நால்வரில் மூவர் அந்த homestay வீட்டிலும், இன்னொருவர் அதனருகிலும் பிடிபட்டனர்.
கடந்த 6 மாதங்களாக இயங்கி வரும் இக்கும்பல் ஒரு நாளைக்கு 200 ரிங்கிட் என்ற வாடகையில் 4 நாட்களுக்கு அங்கு தங்கி, உள்ளூர் சந்தைகளுக்கும் இரவு கேளிக்கை மையங்களுக்கும் சிறு சிறு பேக்கேட்டுகளில் போதைப் பொருளை விநியோகித்து வந்துள்ளனர்.
போலிப் பதிவு எண்ணைக் கொண்ட Perodua Alza, Toyota Vellfire ஆகிய வாகனங்களும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக, நால்வரும் பிப்ரவரி 3 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



