
டாமான்சாரா, ஜனவரி-15 – மலேசியர்களை டிஜிட்டல் கல்வியறிவுக் கொண்டவர்களாக உருவாக்குவதை, இலக்கவியல் அமைச்சு இந்த 2025-ஆம் ஆண்டில் தனது முதன்மை இலக்காக வைத்துள்ளது.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அவ்வாறு கூறியுள்ளார்.
இந்நவீன காலத்தில் தொடர்பு சாதனங்களையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் ஆற்றலை மேம்படுத்தி, மக்கள் தங்கள் வர்த்தகத்தையும் அதன் வழி வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
‘டிஜிட்டல் தொழில்முனைவு’ என அதனை வருணித்த கோபிந்த், அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் முயற்சிகளில் அமைச்சு கவனம் செலுத்துமென்றார்.
இந்நாட்டு இந்தியர்களும் திறமை மிக்கவர்களே; ஆனால் நவீன தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்தி அவர்கள் முன்னேறுகிறார்கள் என்பதே இனி முக்கியம் என அவர் சொன்னார்.
தமது டாமான்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் வருடாந்திர பொங்கல் கலை விழாவில் பங்கேற்ற பிறகு கோபிந்த் அவ்வாறு கூறினார்.
டாமான்சாரா டாமாய் இந்தியச் சமூக மன்றத்தின் ஏற்பாட்டில் டாமான்சாரா டாமாய் சமூக மண்டபத்தில் நேற்றிரவு அக்கலை விழா நடைபெற்றது.
எதிர்பார்த்ததை விட அதிகமாக சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 500 பேர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கலைநிகழ்ச்சிகளுடன், பொங்கல் வைக்கும் போட்டி, சட்டி உடைத்தல் போன்ற பாரம்பரிய போட்டிகளும் நடைபெற்றன.
வருகையாளர்களுக்கு 400 பரிசுக் கூடைகள் வழங்கப்பட்ட வேளை, வயதான B40 மக்களுக்கு 75 புடவைகளும் 85 வேஷ்டிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
குலுக்குச் சீட்டும் நடைபெற்றதாக பொங்கல் கலை விழாவுக்கு ஏற்பாடு செய்த ரமேஷ் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.