
ஷா ஆலாம், மே-25 – திடீர் வெள்ளப் பிரச்னையால் அடிக்கடி அவதியுறும் ஷா ஆலாம், தாமான் ஸ்ரீ மூடா மக்கள், நேற்று சனிக்கிழமை தாங்களே ‘கோத்தோங் ரோயோங்’ கூட்டுத் துப்புரவுப் பணியில் களமிறங்கினர்.
‘தாமான் ஸ்ரீ மூடாவை மீண்டும் கட்டியெழுப்புவோம்’ என்ற கருப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட அத்திட்டத்திற்கு, தாமான் ஸ்ரீ மூடா இடைநிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 25 தன்னார்வலர்களும் நேரில் வந்து ஆதரவுக் கரம் நீட்டினர்.
தாமான் ஸ்ரீ மூடா, புக்கிட் கெமுனிங், பத்து லாப்பான் ஆகிய இடங்களில் துப்புரவுப் பணிகளுக்குத் திட்டமிடப்பட்டு, நேற்று தாமான் ஸ்ரீ மூடாவில் அப்பணி மேற்கொள்ளப்பட்டது.
குடியிருப்பாளர்களும், திடீர் வெள்ளத்திற்குக் காரணமாக உள்ள கால்வாய்க் குப்பைகளையும் மணல், உள்ளிட்ட பிற கழிவுகளையும் அகற்ற உதவினர்.
சேகரிக்கப்பட்ட குப்பைகளும் கழிவுகளும் லாரிகள் வாயிலாக கழிவுப் பொருட்களைக் கொட்டும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
zink குழாய்களால் கால்வாய்கள் சுருங்கியது, நீர் ஓட்டத்தில் கழிவுகள் சிக்கிக் கொண்டது போன்ற பிரச்னைகள் தாமான் ஸ்ரீ மூடாவில் நீடிக்கின்றன.
வெள்ளத் தடுப்புப் பணிகள் என்ற பெயரில் வேலிகள் போடப்பட்டுள்ளன; ஆனால் வேலைகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை.
கோத்தோங் ரோயோங் ஏற்பாட்டாளரும் அப்பகுதி குடியிருப்பாளருமான உமாகாந்தன், துப்புரவுப் பணியில் தாங்களே களமிறங்கியதற்கான காரணத்தை வணக்கம் மலேசியாவிடம் விளக்கினார்.
கோத்தோங் ரோயோங்கில் பங்கெடுத்த தாமான் ஸ்ரீ மூடா மக்களில் சிலரும் வெள்ளப் பிரச்னையால் தாங்கள் சந்தித்து வரும் சவால்களை விவரித்தனர்.
அடிக்கடி திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் தாமான் ஸ்ரீ மூடா மக்கள், அதிகாரத் தரப்பு கண்டும் காணாமல் இருப்பதாகக் கூறி கடந்த மாதம் அங்கு அமைதி மறியல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.