
பெடோங், ஜூன்-21 – நாட்டின் தலைச்சிறந்த தனியார் பல்கலைக் கழகங்களில் ஒன்றான ம.இகாவின் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம், இன்று தனது 16-ஆவது பட்டமளிப்பு விழாவை கோலாகலமாக நடத்தியது.
கெடா, பெடோங்கில் உள்ள அதன் முதன்மை campus வளாகத்தில் நடைபெற்ற அவ்விழாவினை, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தரும், ம.இ.கா தேசியத் தலைவருமான தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், கட்சியின் இதர உயர்மட்ட தலைவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தினர், பிரமுகர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.
ஏய்ம்ஸ்ட் உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும், ஆசியாவின் சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் மாற வேண்டும் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறது; அவ்வகையில் துறைசார் திறன்கள் மற்றும் உலகளாவிய கண்ணோட்டத்துடன் கூடிய எதிர்கால பட்டதாரிகளை தொடர்ந்து உருவாக்குவதாக, MIED எனப்படும் மாஜூ கல்வி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவருமான தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தமதுரையில் கூறினார்.
2024 -2025 கல்வியாண்டில் படிப்பை முடித்த மொத்தம் 829 பட்டதாரிகள் இதில் பட்டம் பெற்றனர்.
167 மருத்துவ பட்டதாரிகள், 76 பல் மருத்துவ பட்டதாரிகள், 76 மருந்தக பட்டதாரிகள், 20 பொறியியல் மற்றும் கணினி தொழில்நுட்ப பட்டதாரிகள் உள்ளிட்டோரும் அவர்களில் அடங்குவர்.
இது தவிர, 22 பேருக்கு முதுகலைப் பட்டமும், 10 பேருக்கு முனைவர் டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது.
மேலும், இந்தியா, பாகிஸ்தான், சூடான் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த அனைத்துலக பட்டதாரிகளின் சாதனைகளும் இப்பட்டமளிப்பு விழாவில் அங்கீகரிக்கப்பட்டது;
இது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய தாக்கத்தையும் பல்வேறு படிப்புத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டியது.
தத்தம் துறைகளில் மிகச் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும் சிறப்பு விருதுகளும், முன்னாள் மாணவர்களின் அசாதாரண சாதனைகளைப் பாராட்டி சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.
தவிர, வேந்தர் விருது, தொழில்முறை சாதனையாளர் விருது, சமூக சேவை விருது மற்றும் நாளைய தலைவர் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இவ்வேளையில், பட்டம் பெற்ற மாணவர்கள் சிலர் வணக்கம் மலேசியாவிடம் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
2001-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, ஏய்மஸ்ட் பல்கலைக் கழகம் கல்விச் சிறப்பிற்கும் புதுமைக்கும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
மருத்துவம், மருந்தகம், பல் மருத்துவம், உயிரி தொழில்நுட்பம், கணக்கியல், AI, இணையப் பாதுகாப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இக்கல்வி நிறுவனம் 43 க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை திட்டங்களை வழங்குகிறது.
மேற்கல்விக்கான மாணவர்களின் முதல் நிலைத் தேர்வாக ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம் மாறி வருவது, ம.இ.காவுக்கும், தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் எடுத்து வரும் தொடர் முயற்சிகளுக்கும் கிடைத்த பலனாகும்