
மலாக்கா, ஜூன் 18- தனது தாயையும் அண்ணணையும் கொலை செய்ததோடு கடைசி தம்பியை கத்தியால் குத்தி காயம் விளைவித்ததாக ஆயர் கெரோ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 5ஆம் படிவ மாணவன் ஒருவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அரசு தரப்பு துணை வழக்கறிஞர் ராயா பாரா நபிஹா சோபியான் இந்த குற்றச்சாட்டை மஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கனி முன்னிலையில் கொண்டுவந்தபோது நீதிமன்ற நடவடிக்கையில் இதர தரப்பினர் எவரும் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் சார்பில் மூன்று வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.
17 வயதுடைய குற்றஞ்சாட்டப்பட்ட அந்த மாணவன் தனது 51 வயது தாயாரை வேண்டுமென்றே கொலை செய்ததாக முதல் குற்றச்சாட்டும் , 21 வயது சகோதரரை கொலை செய்த மற்றொரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்கியுள்ளான். ஜூன் 12ஆம் தேதி Jalan RM 3 , Taman Rambai Mutiara விலுள்ள ஒரு வீட்டில் விடியற்காலை 5 மணிக்கும் 5.30 மணிக்குமிடையே இக்குற்றங்களை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டான். தண்டனை சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்ட இரண்டு கொலைக் குற்றங்களும் நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம். மேலும் அன்றைய தேதியில் அதே நேரத்தில் தனது 13 வயதுடைய இளைய சகோதரனை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தியதாக மூன்றாவது குற்றச்சாட்டையும் அந்த மாணவன் எதிர்நோக்கியுள்ளான். மெண்டரின் மொழியில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் புரிந்துகொண்டதாக தலையசைத்த போதிலும் அக்குற்றங்களை அவன் மறுத்தான். கொலைக் குற்றம் உயர் நீதிமன்ற விசாரணையின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.