
ஜோஹேனஸ்பெர்க், நவம்பர்-23 – கம்போடியாவுடனான எல்லைப் பிரச்னையில் மலேசியா தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதாக, தாய்லாந்தில் சில தரப்புகள் குற்றம் சாட்டுவதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
அதுவோர் அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றார் அவர்.
அவ்விரு நாடுகளும் அமைதிப் பேச்சு நடத்துவதற்கு, 2025 ஆசியான் தலைவர் என்ற வகையில் மலேசியா உதவியதே தவிர, அவர்களின் பிரச்னையில் தலையிடவில்லை.
“இரு நாட்டு பிரதமர்களும், இராணுவத் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கு மலேசியா மத்தியஸ்தம் செய்தது; அவ்வளவுதான், மற்றபடி அவர்களின் உள்விவகாரங்கள் பற்றி நமக்குத் தெரியாது, அதில் தீர்வு கூறவும் முடியாது” என அன்வார் சொன்னார்.
எனவே, மலேசியா மீதான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை எனக் கூறிய பிரதமர், அதற்காக அமைதி முயற்சியிலிருந்து பின்வாங்க மாட்டோம் என உறுதியாகச் சொன்னார்.
தங்கள் பிரச்னையில் மலேசியா தலையிடுவதாகக் கூறி முன்னதாக பேங்கோக்கில் உள்ள மலேசிய தூதரகத்தின் முன் சில தரப்புகள் போராட்டம் நடத்தினர்.
தென்னாப்பிரிக்கா, ஜொஹேனஸ்பெர்கில் G20 மாநாட்டில் பங்கேற்ற அன்வாரிடம் அது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் அவ்வாறு சொன்னார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் முன்னிலையில் அக்டோபர் 26-ஆம் தேதி கோலாலம்பூரில் தாய்லாந்து – கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.



