அங்காரா, ஜனவரி-22 – துருக்கியின் பிரபல பனிச்சறுக்கு விடுதியில் அமைந்துள்ள ஹோட்டல் திடீரென தீப்பிடித்ததில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 66-ரைத் தாண்டியுள்ளது.
மேலும் 51 பேர் அதில் காயமடைந்துள்ளனர்; அவர்களில் பலரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் மரண எண்ணிக்கை மேலும் உயரலாமென அஞ்சப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த அச்சம்பவத்தில், 12 மாடிகள் கொண்ட ஹோட்டலின் கூரையில் முதலில் தீ ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் அங்குள்ள உணவகமொன்றிலிருந்து தான் தீ பரவியதாக வேறு சில தகவல்கள் கூறுகின்றன.
ஹோட்டல் கட்டடம் மர உறைப்பூச்சைக் கொண்டதென்பதால் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாகப் பரவியுள்ளது.
இரு வார பள்ளி விடுமுறை என்பதால் ஹோட்டலில் அப்போது 234 பேர் தங்கியிருந்தனர்; பெரும்பாலோர் தூங்கிக்கொண்டிருந்ததால் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இருவர் பயத்தில் மாடியிலிருந்து குதித்த போது உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவமிடம் விரைந்த தீயணைப்பு-மீட்புத் துறை போராடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரவில்லை; அதை விசாரிக்க துருக்கி அரசாங்கம் 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.