Latestமலேசியா

இந்திய இளைஞர்களுக்கான ‘நண்பா’ திட்டம் விரிவுபடுத்தப்படும் – தியோ நீ சிங்

கூலாய், மே-19 – இந்தியச் சமூகத்தை மையமாகக் கொண்ட பகுதிகளில் ‘நண்பா’ எனும் திட்டத்தை J-Kom எனும் சமூகத் தொடர்புத் துறை நாடு முழுவதும் விரிவுபடுத்தவுள்ளது.

தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கத் தகவல்களை கொண்டுச் சேர்ப்பதற்கும், அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கும் குறிப்பாக இந்திய இளைஞர்களுக்கும் இடையிலான தொடர்பு இடைவெளியைக் குறைப்பதற்குமான ஒரு தளமே இந்த ‘நண்பா’ திட்டமாகும். இத்திட்டம் இப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை நாடு தழுவிய அளவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என விளக்கமளித்துள்ளார் தியோ.

இது ஒரு நல்ல தொடக்கம். தொடர்ந்து இந்தியச் சமூகம் அதிகமுள்ள பேராக், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் போன்ற மாநிலங்களுக்கு நாங்கள் செல்வோம் என, ஜோகூர், கூலாயில் ‘நண்பா’ திட்ட நிகழ்ச்சியின் அறிமுக விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

இதனிடையே, தாமான் மேவா பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்த ‘நண்பா’ நிகழ்ச்சியில், ரஹ்மா விற்பனை, அரசாங்க, தனியார் துறை கண்காட்சிகள், வண்ணம் தீட்டுதல் மற்றும் சுவரொட்டி வரைதல் போட்டிகள் போன்ற பல்வேறு சுவாரஸ்யமான அங்கங்கள் இடம்பெற்றன.

இந்த முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த முதல் இடமாக கூலாயைத் தேர்ந்தெடுத்ததற்காக, அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ J-Kom-முக்கு நன்றித் தெரிவித்தார்.

இது கூலாய் மக்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும், மக்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து கேட்டறிவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கான சான்றாகவும் அமைந்துள்ளதாக அவர் வருணித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!