
தெலுக் இந்தான், ஜூலை-24- பேராக், தெலுக் இந்தான், ஜாலான் சுங்கை நிபோங்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் பாழடைந்த பலகை வீட்டிலிருந்து மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த இரட்டை மாடி வீட்டில் தனியே வசித்து வந்த 75 வயது தம்பியைப் பார்ப்பதற்காக, கடந்த சனிக்கிழமையன்று 78 வயது அண்ணன் அங்குச் சென்றுள்ளார்.
ஆனால் வீட்டை அடைந்தவருக்கு துர்நாற்றம் தாங்க முடியவில்லை; மேலேறி பார்க்கலாம் என்றால் பலகை படிகட்டும் மக்கிப் போயிருந்தது.
இதையடுத்து அம்முதியவர் போலீஸில் புகார் செய்தார்.
தீயணைப்பு – மீட்புப் படையுடன் சம்பவ இடம் விரைந்த போலீஸ், அங்கு எலும்புக்கூட்டையும் மண்டை ஓட்டையும் கண்டெடுத்தது. உயிருள்ள நாய் ஒன்றும் மீட்கப்பட்டது.
இறந்தவருக்குச் சொந்தமான பொருட்கள் எதுவும் கலையாமல் வீட்டில் அப்படியே இருந்தன.
இதையடுத்து அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டு, சவப்பரிசோதனைக்காக சடலம் தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
1960-ஆம் ஆண்டுகளில் பாசீர் பெடாமார் (Pasir Bedamar) சட்டமன்ற உறுப்பினராக இருந்த Wah Keng Jooi என்பவரின் கடைசி மகனே, எலும்புக்கூடாக மீட்கப்பட்டவர் என தெரியவருகிறது.