கோலாலம்பூர், ஜூலை-21 – மலேசிய சீனர் சங்கமான ம.சீ.ச, தேசிய முன்னணியிலிருந்து (BN) வெளியேறப் போவதாகக் கூறப்படுவதை, BN பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடீர் (Zambry Abdul Kadir) மறுத்துள்ளார்.
குறிப்பிட்ட சில தரப்பினர் கிளப்பி விட்ட புரளியே அதுவென, அவர் சொன்னார்.
அச்செய்தியில் உண்மையில்லையென ம.சீ.ச தலைவரும் அதன் பொதுச் செயலாளருமே உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனவே வதந்திகளுக்கு செவிசாய்க்கத் தேவையில்லை என உயர் கல்வி அமைச்சருமான Dr சாம்ரி சொன்னார்.
தேசிய முன்னணியின் நீண்ட கால உறுப்புக் கட்சிகளில் ஒன்றான ம.சீ.ச, அக்கூட்டணியுடனான 72 ஆண்டுகால நட்பை முறித்துக் கொண்டு வெளியேறப் போவதாக வெள்ளிக்கிழமை தகவல் பரவியது.
நடப்புச் சூழ்நிலையில் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மகிழ்ச்சியாக இல்லையென்பதே அம்முடிவுக்குக் காரணமென அத்தகவலில் கூறப்பட்டது.
எனினும், கட்சி மேலிடத்துக்கு அப்படியொரு நெருக்குதல் எதுவும் தரப்படவில்லையென அதன் சில தலைவர்கள் சனிக்கிழமை தெளிவுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.