
மாரான், ஜூன் 10 – இன்று அதிகாலை 1 மணியளவில், மலேசிய பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா (UMPSA) பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேர் உட்பட மொத்தம் 28 பேர் பயணித்த விரைவுப் பேருந்து, கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையில் (LPT) சுமார் 161.5 கிலோமீட்டர் தொலைவில் லாரி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோலாலம்பூர் TBS பேருந்து நிலையத்திலிருந்து குவாந்தான் TSK பேருந்து நிலையத்தை நோக்கி பயணித்த அந்த விரைவு பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட அனைத்து பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்கள் இன்றி உயிர் தப்பியதாக மாரான் மாவட்ட காவல்துறைத் தலைவர் வோங் கிம் வாய் தெரிவித்துள்ளார்.
அந்த விரைவு பேருந்து, டிரெய்லரின் பின்புறத்தில் மோதிய நிலையில், பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்திற்கு பிறகு அனைத்து பயணிகளும் மற்றொரு பேருந்தில், குவாந்தான் TSK பேருந்து நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இவ்விபத்து சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று UPSI பல்கலைகழக மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகி, 15 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் இத்தகைய சம்பவம் ஏற்பட்டது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.