
மலாக்கா, ஜூன் 12 – இன்று அதிகாலை மலாக்காவின் புக்கிட் ரம்பாயிலுள்ள வீடொன்றில் தாயும் மூத்த சகோதரனும் இறந்து கிடந்த நிலையில், காவல் துறையினர் அவ்விடத்தில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 17 வயது நிரம்பிய அப்பெண்ணின் இளைய மகன் மீது சந்தேகம் கொண்டு கைது செய்துள்ளனர்.
அச்சந்தேக நபர் கல்வியில் சிறந்து விளங்கினாலும் மன அழுத்தத்தின் காரணமாக இந்த இரட்டை கொலைகளை செய்திருக்கலாமென்று போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர் என்று மலாக்கா காவல்துறைத் தலைவர் துல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த பதின்ம வயது ஆடவன், விசாரணைக்கு உதவுவதற்காக தடுப்பு காவலில் வைக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கவுள்ளனர்.
மேலும் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் சந்தேக நபரின் தாயார், SPM தேர்வை எழுதவிருக்கும் தனது இளைய மகனை படிக்க சொல்லி வற்புறுத்திருக்கும் பட்சத்தில், அக்கொலையை அவர் செய்திருக்கலாம் என்று போலீசார் கணித்துள்ளனர்.
சந்தேக நபரின் தாய் மற்றும் மூத்த சகோதரரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.