
வாஷிங்டன், பிப்ரவரி-18-பூமிக்கு அருகில் மறைந்துள்ள ஆபத்தான விண்கற்கள் குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் கணிப்பின்படி, 25,000-க்கும் மேற்பட்ட அத்தகைய விண்கற்கள் இன்னும் கண்டறியப்படாமல் உள்ளன.
நாசாவின் கிரகத் தற்காப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் ஆயிரக்கணக்கான விண்கற்களை கண்காணித்து வந்தாலும், பெரும்பாலானவை இன்னும் தெரியாதவையாகவே உள்ளன.
இவற்றில் சில, பூமியைத் தாக்கினால், ஒரு நகரத்தை முழுவதுமாக அழிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை என்ற தகவல் அதிர்ச்சியைத் தருகிறது.
அண்மையில் நாசா நடத்திய DART திட்டத்தில், ஒரு விண்கல்லை திசை மாற்ற முடியும் என்பது நிரூபணமானது.
ஆனால் மிகப்பெரிய விண்கல் நேரடியாக பூமியை நோக்கி வந்தால், அதைத் தடுக்க மனிதகுலத்திற்கு போதுமான நேரமும் தொழில்நுட்பமும் இருக்காது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
கண்ணில் படாமல் மறைந்துள்ள விண்கல் பூமியை நோக்கி வரலாம் என்ற சிந்தனை தனக்கு தூக்கமில்லா இரவுகளைத் தருவதாக, ஒரு விஞ்ஞானி வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
சுருக்கமாகச் சொன்னால், பூமிக்கான பேராபத்து, நாம் இன்னும் காணாத விண்கற்களிலிருந்தே இருக்கலாம்…
இந்நிலையில், மிகச் சிறந்த கண்டறிதல் முறைகள், அனைத்துலக ஒத்துழைப்பு, மற்றும் “Planetary Defense” எனப்படும் கிரகத் தற்காப்பு திட்டங்களில் அதிக முதலீடு ஆகியவை அவசியமாவதாக நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.



