
கோலாலம்பூர், ஏப்ரல் 21 – தனது அதிகாரிகள் மற்றும் பணியாளர்களில் 1,181 பேர் உடல பருமன் மற்றும் 229 பேர் பல்வேறு உடல் நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்தாக தீயணைப்புத்துறை கண்டறிந்துள்ளது. அவர்களில் பலர் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதயம் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் போன்ற நாள்பட்ட நோய்களைக் கொண்டிருப்பதும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் நோர் ஹிஷாம் கூறினார்.
நமது பணியாளர்களை உகந்த நிலையில் வைத்திருக்க அவசரமாக உடற்பயிற்சி, மற்றும் மறுவாழ்வு திட்டங்களை முழுமையாக ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக இன்று கோத்தா பாருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.
பணியாளர்களிடையே மோசமான உடல்நலம் நிறுவன மற்றும் தனிப்பட்ட செயல்திறனைப் பாதிக்கக்கூடும் என்றும், எதிர்காலத்தில் அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு உடல் ஆரோக்கியம் முக்கியமானது என்றும் அவர் கூறினார். பஹாங்கைச் சேர்ந்த இரண்டாவது மூத்த தீயணைப்பு அதிகாரி சம்சு பாரின் அபு பாக்கார் (Samsu Bahrin Abu Bakar) , முழுமையான கட்டொழுங்கு மற்றும் சுய கட்டுப்பாட்டினால் தனது எடையை 104 கிலோவிலிருந்து 84 கிலோவாக வெற்றிகரமாகக் குறைத்த கதையை நோர் ஹிஷாம் பகிர்ந்து கொண்டார்.
அவர் தனது உணவை மாற்றியமைத்து, தொடர்ந்து மூன்று மாதங்கள் தினமும் 10,000 அடிகள் தவறாமல் வேகமாக நடக்கத் தொடங்கினார். அவரது உறுதிப்பாடு மற்றவர்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது என கண்டறியப்பட்டதாக நோர் ஹிஷாம் சுட்டிக்காட்டினார்.