
கோலாலம்பூர், ஜூன் 10 – ஸ்ரீ கெம்பாங்கான் ,டேசா செர்டாங் குடியிருப்பு பகுதியில் நாய்களை வளர்க்கும் சிலரின் பொறுப்பற்ற போக்கினால் குடியிருப்புவாசிகள் பெரும் அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர். அண்டை வீட்டுக்காரர்களின் நாய்கள் கண்டபடி சுற்றித் திரிவதால் அங்கு குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் பெரும் தொல்லைக்கு உள்ளாகியுள்ளனர். தனது அண்டை வீட்டுக்காரர் நான்கு பெரிய நாய்கள் உடபட ஐந்து நாய்களை வளர்த்து வருவதாகவும் அவற்றை கழுத்தில் கயிறு கட்டாமல் அல்லது கண்காணிப்பு இல்லாமல் அந்த நாய்களை வெளியே அழைத்துச் செல்கிறார். இப்படி அழைத்துச் செல்லப்படும் நாய்கள் தனது வீட்டிற்கு முன்பும் சுற்றியுள்ள பகுதிகளிலும் அசுத்தம் செய்கின்றன. இந்த நாய்கள் குப்பைகளை கிளறி எல்லா இடங்களும் எடுத்துச் செல்வதாக குடியிருப்பு வாசிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தினமும் காலையில் அதன் உரிமையாளர் வேலைக்குச் செல்லும் போதெல்லாம் நாய்கள் அடிக்கடி குரைக்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டும் அதனை பொருட்படுத்தாமல் அவர் இன்னமும் ஒவ்வொரு நாளும் தனது நாயை அவிழ்த்துவிடுகிறார். இது குறித்து காஜாங் நகரான்மை கழகத்திலும் புகார் செய்துள்ளதாக எல். லிண்டா என்பவர் இணையத் தள பதிவேட்டிற்கு எழுதிய புகார் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். எனவே இந்த விவகாரத்தில் காஜாங் நகரான்மைக் கழகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.