
நியூ யோர்க், மே-18- அமெரிக்கா நியூ யோர்க்கில் மெக்சிகோ கடற்படையின் பயிற்சிக் கப்பல் புரூக்லின் பாலத்தை மோயதில் இருவர் பலியாயினர்.
நேற்றிரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில் மேலும் 19 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையிலிருப்பதாக, நியூ யோர்க் மேயர் எரிக் அடாம்ஸ் கூறினார்.
சம்பவத்தின் போது மொத்தம் 277 பயணிகளை அக்கப்பல் ஏற்றியிருந்தது.
நியூ யோர்க் மாநகரில் விளம்பரத் தொடரில் பங்கேற்றிருந்த அக்கப்பல், கிழக்கு ஆற்றைக் கடக்கும் போது அதன் கம்பத்தின் மேல் பகுதி புரூக்லின் பாலத்தை மோதியது.
அதில் கப்பலின் 3 கம்பங்கள் உடைந்து பாலத்தின் மீது விழுவதை, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் பதிவுச் செய்த வீடியோக்களில் காண முடிகிறது.
பாலத்தில் மோதியதும் கப்பல் ஆற்றோரமாக ஒதுங்கிய வேளை, அங்கிருந்தவர்கள் பாதுகாப்புத் தேடி ஓடினர்.
1883-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட புரூக்லின் பாலம், 2 கல் கோபுரங்களின் துணையுடன் 490 மீட்டர் நீளத்தைக் கொண்டதாகும்.
ஒவ்வொரு நாளும் 100,000 வாகனங்களும் 32,000 பாதசாரிகளும் அப்பாலத்தைப் பயன்படுத்துகின்றனர்.
அதன் பாதசாரிகளுக்கான பாதையானது, நியூ யோர்க் மாநகருக்கு வரும் சுற்றுப் பயணிகளைக் கவரும் முக்கிய இடமாகும்.