Latestஉலகம்

நியூ யோர்க்கில் பிரசித்திப் பெற்ற சமையல் விருது வென்ற தமிழகத்தின் விஜய் குமார்

நியூ யோர்க், ஜூன்-22 – அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தின் சிறந்த சமையல்காரர் விருதை வென்று தமிழகத்தின் விஜய் குமார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சமையல் கலைஞர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ஜேம்ஸ் பியர்ட் (James Beard) விருதே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதுவும் விருதுக்கு முதல் முறையாகப் பரிந்துரைக்கப்பட்டு அவர் அதனைக் கைப்பற்றியுள்ளார்.

நியூ யோர்க்கில் உள்ள மிச்செலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ‘செம்மா’ (Semma) என்ற இந்திய உணவகம், அசல் தென்னிந்திய உணவு வகைகளுக்குப் பிரபலமானது.

அங்கு தான் விஜய் குமார் சமையல்காரராக உள்ளார்.

விருது வாங்கியதும் நிகழ்த்திய ஏற்புரையில் “நான் சமைக்கத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கருப்பு பையன் இப்படி ஓர் இடத்தில் வந்து நிற்பான் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை; ஆனால், மிகுந்த அக்கறையுடனும், ஆத்மார்த்தமாகவும் உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டு இந்த உயரத்தை எட்டியுள்ளேன்” என விஜய் குமார் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு வெளியே இந்திய உணவு என்பது வெறும் ‘butter chicken’, ‘Naan’ ரொட்டி, பொதுவான கறிக்குழம்பு என மட்டுமே இருந்து வந்துள்ளது.

அந்த தவறான கருத்தை விஜய் குமார் மாற்றியுள்ளார்.

அதற்காக அமெரிக்கர்களின் நாவிற்கு ஏற்ப அவர் சுவைகளை மாற்றவில்லை.

மாறாக, தான் கடந்த வந்த பாதையையும் பாரம்பரியத்தையும் மறக்காமல், ஆழ்ந்த தனிப்பட்ட மற்றும் காரமான உணவுகளைச் சமைத்து அவர் நீதிபதிகளின் மனங்களை வென்றார்.

நியூ யோர்க்கும் மண் மணம் மாறாத நத்தைப் பிரட்டல் உள்ளிட்ட அவரின் உணவை ஏற்றுக் கொண்டது.

விஜயின் சாதனைக்கும், வைரலாகி வரும் அவரின் உரைக்கும் பாராட்டுத் தெரிவித்து சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழகத்தின் வளமான சமையல் பாரம்பரியம் தற்போது உலக கவனத்தை ஈர்த்து வருவதாக அவர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!