
குவாலா திரங்கானு, செப்டம்பர்-4- படப்பிடிப்புக்காக நடுக் கடலுக்கே காரை கொண்டுச் சென்ற சமூக ஊடகப் பிரபலம் ஒருவரை, மலேசிய கடல்சார் அமுலாக்க நிறுவனம் குவாலா திரங்கானுவில் கைதுச் செய்துள்ளது.
பிடோங் (Bidong) தீவு அருகே குவாலா திரங்கானுவின் வடமேற்கே 16 கடல் மைல் தொலைவில் நேற்று மாலை 6 மணிக்கு அந்நபர் கைதானார்.
பயணிகள் படகால் இழுத்துச் செல்லப்பட்ட மேடையில் காரை வைத்த அந்நபரின் செயல், அப்பட்டமான வணிகக் கப்பல் சட்ட மீறல் என, திரங்கானு கடல் அமுலாக்கத் துறையின் இயக்குநர் கேப்டன் Hamiludin Che Awang கூறினார்.
அந்த மிதவை மேடை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது; இது பணியாளர்கள், பயணிகள் மற்றும் பிற நீர் பயனர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர்.
செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் இயக்கியதற்காக, படப்பிடிப்புடன் வந்த மற்றொரு படகும் தடுத்து வைக்கப்பட்டது.
உள்ளூரைச் சேர்ந்த அந்தச் சமூக ஊடகப் பிரபலம், பணியாளர்கள் மற்றும் 21 முதல் 32 வயதுடைய பயணிகளும் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.